புதன், 19 மே, 2010

வைரமுத்துவின் வைரவரிகளில்..............................

ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ


வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடி
ஊன் உருக்கு
உள்ளொளி பெருக்கு
மெய்ப்பதம் தேடு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை
உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள் அழி
****
நீயென்று கருதிய
நீயழிந்தொழிய
நீயல்லாத நீதான் நீ
****
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!
****
ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்
வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்
முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்
***
வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்
எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்
உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்
பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்
***
புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்
****
எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ
அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்
****
உடைந்தகுடம் வழியே
வழிந்தோடும் தண்ணீர்
வாழ்வு
ஒவ்வொரு சொட்டும்
உறிஞ்சற்பாலது
****
மொழியாய் முதிர்ந்தது ஒலி
கவியாய் முதிர்ந்தது மொழி
என்னவாய் முதிரும் கவி?
கண்காணாக் கடவுள்
தான்தோன்றியாகுமெனின்
கண்காணும் பிரபஞ்சம்
தான்தோன்றியாகாதா?
***
உணர்வுள்ள காலை
மரணம்வரப் போவதில்லை
மரணமுற்ற காலை
உணர்விருக்கப் போவதில்லை
சாவுகுறித்தஞ்சுவதேன் சகோதரா?
உண்டாக்கும் அனைத்தையும்
உள்வாங்கும் பூமிக்குத்
தாயெனும் பட்டம் தகுமா?
***
கேள்விகள் நல்லவை
சூன்யத்தில் பூப்பூப்பவை
வாழ்வைச் சலிக்கவிடாதவை
****
தயிருக்கு வெளியே
வெண்ணெய் திரளாது
வாழ்வுக்கு வெளியே
ஞானம் பிறவாது


****
அடைத்துக்கிடக்கும் ஐம்பூதங்களைத்
திறக்கத்தானே ஐம்புலன்கள்
சாவிகளுக்கே பூட்டுகளிட்டால்
சாத்தியப்படுமா அனுபூதி?


****
ஆளை வீழ்த்தும் பள்ளங்கள் - பல
அவமானங்கள் காயங்கள்
நாளை வருமென அறிந்தாலும் - என்
நடையின் வேகம் நான் குறையேன்
ஞாலம் கருதினும் கைகூடும் - அடி
நானும் அவனும் ஒருகட்சி
காலம் ஒருநாள் சொல்லட்டும் - நான்
கடலை எரித்த தீக்குச்சி












முதல் முதலாய் அம்மாவுக்காக.....http://www.youtube.com/watch?v=s3e4PO2rqLk






ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே!காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?
பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!
வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு
கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?
இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்
கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே
தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா
கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்
திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்
வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேலையிலே
பாசம்வந்து சேரலையே!
கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போன பின்னே
அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே
படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!
வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!
எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?


























கருத்துகள் இல்லை: